Pages

Wednesday, November 9, 2011

உண்மை(யாகிப் போன) கதை

தோட்டத்து மரத்தடியில் அம்மா பொம்மை போல்

உடகார்ந்திருந்தாள். சக்கர நாற்காலியில் குஷன்களுக்கு

மத்தியில் புதையுண்டு; தும்பைப் பூவாய் நரைத்த தலை

எண்ணை பூசி வாரியதில் சாயங்கால வெய்யிலில் வெண்

பட்டாய் மினுமினுத்தது. முகத்தில் இன்னும் ரோஜாச் சிவப்பு.

செதுக்கி வைத்த்து போன்ற தீர்க்கமான மூக்கை ஒட்டிய

கன்னங்களில் மேலும் கீழுமாக ஓடிய வரிகள் வெள்ளை

மஸ்லின் துணிமடிப்பு போல மிருதுவாகத் தெரிந்தன. இளம்

நீல நிறத்தில் பூக்கள் போட்ட மாக்ஸி அணிந்து பொம்மை

போல தோட்டத்துப் பூக்களைப் பார்த்தபடி அம்மா.

அம்மாதானா?

நான் அம்மாவை நோக்கி நடந்தேன். சற்று எட்டி

புல்தரையில் அமர்ந்து மாலைமுரசு படித்துக் கொண்டிருந்த

வள்ளி தலைநிமிர்ந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

விருக்கென்று எழுந்து,

‘’நாற்காலி கொண்டு வரேன்’’ என்று உள்ளே ஓடினாள்.

‘’ ஹலோ அம்மா!’’ என்று நான் உற்சாக குரல் எழுப்

பினேன். அம்மாவுக்குக் காதில் விழவில்லை. பூக்களைத் தீவிரமாகப் பார்த்தபடி இருந்தாள். நான் அருகில் சென்று அவளது

வெளுத்த சுருங்கிப்போன கைவிரல்களைப் பற்றி நேருக்குநேர்

நின்றேன். அம்மாவுடைய கண்களில் லேசான சலனம் தெரிந்த்து.

மஸ்லின் மடிப்பு மெல்லமெல்லக் கலைந்து சொப்பு போல இருந்த உதடுகள் விரிந்தன. புன்னகை மலர்ந்தது.

‘’ ஆயா சிரிக்குது!’’ என்றாள் நாற்காலியை ஏந்தியபடி

வந்த வள்ளி.,அட பாப்பா சிரிக்குது என்பது போல.. அம்மா நிஜமாகவே பாப்பாவைப் போல களுக் மளுக் என்று சிரித்தாள்.

சிரிப்பு தாங்காமல் இருமல் வர ஆரம்பித்தது. நான் பதற்றத்துடன்

அம்மாவின் மார்பை அழுத்தித் தேய்த்தேன். ‘’மெள்ள,மெள்ள’’என்றேன். நான் தேய்க்கும் போது அம்மாவுக்கு

மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிற்று. திகைத்துப்போய் நின்ற வள்ளியிடம் , ‘’’தண்ணி கொண்டா சீக்கிரம்’’ என்று விரட்டினேன். அம்மா மீண்டும் இருமினாள். இருமலில் கலவரப்

பட்டுப் போன குழந்தையைப்போல என்னை நோக்கிய கண்களில்

பரிதவிப்பு தெரிந்த்து. நாக்கு துருத்திக் கொண்டு இருமல் வெளிப்

பட்டது.

மெள்ள மெள்ளம்மா. இப்ப சரியாயிடும்’’என்று நான்

ஆசுவாசப் படுத்தினேன். வள்ளி கொண்டு வந்த நீரை மெதுவாகப் பருக வைத்தேன். போதும் என்று அம்மா சொல்லவில்லை. ஆனால் நான்காவது வாய் உள்ளே செல்லாமல் வெளியே வழிந்த்து. ஆயாசப் பட்டுப் போனதுபோல தலையணையில் தலையைச் சாய்த்து அம்மா கண்களை மூடிக் கொண்டாள். மூச்சு

சீராக வந்த்து.

‘’அப்பாடா’’என்றாள் வள்ளி நிம்மதியுடன். ‘’ஒரு நிமிஷம் பயந்து போனேன்.’’ நான் ஒன்றும் பேசாமல் அம்மாவின்

வாயைத் துடைத்தேன். ஸ்பர்சத்தின் உணர்வில் அம்மா கண்ணைத் திறந்தாள்.

‘’அப்படி எதுக்கு சிரிச்சீங்களாம்?’’என்றாள் வள்ளி.

அம்மா பரப்ரும்ம்மாய் அமர்ந்திருந்தாள். மஞ்சள் ரோஜாவில்

அமர்ந்திருந்த வண்ணாத்திப் பூச்சியைத் தீவிரமாகப் பார்த்தாள்.

வள்ளி சிரித்தாள்.

‘’எப்படி எதுவுமே நடக்காத மாதிரி உட்கார்ந்திருக்காங்க பாத்தீங்களாம்மா? ரெண்டு நிமிஷம் முந்தி

கதிகலங்க அடிச்சாங்கன்னா யாராவது நம்புவாங்களா?’’

4 comments:

  1. இக்கதையில் வரும் தாய் போல சில சின்னக்குழந்தைகள் மூச்சுவிடாமல் அழுது நம்மை கதிகலங்க வைத்து விடுவார்கள். அதுதான் வாசித்ததும் ஞாபகம் வந்தது.
    பகிர்வுக்கு நன்றி.
    -சித்திரவீதிக்காரன்.

    ReplyDelete
  2. என்ன ஒரு எழுத்து நடை இல்லியா நாமும் நேரில் அங்கே உக்காந்திருப்பதுபோல இருக்கு.

    ReplyDelete
  3. சித்திரவீதிக்காரன்,
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. வாசந்தியின் நடை பற்றிச் சொல்ல வேண்டுமா?
    வருகைக்கு நன்றி லட்சுமி அம்மா.

    ReplyDelete