Pages

Tuesday, January 3, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-8

a





.



அடுத்தது ஒரு இண்டர் கிளாஸ் பெட்டி.அதற்க்கடுத்தது’ செகண்ட்’’ . போகும்போதே அதன் உள்ளே அசுவாரசியமாக எட்டிப் பார்த்தான்.
அதில் ஜன்னலோரம் படுத்திருந்த ஆஜானுபாகுவான ஒருவர் எழுந்து
உடகார்ந்து,’’ மிஸ்டர்’’! என்று அவனை அழைத்தார்.

‘’என்னையா கூப்பிட்டீர்கள்?’’ ’

‘’உம்மைத்தான்! இது கும்பகோணந்தானே?’’

‘’ஆமாம்—‘’

‘சற்று நில்லும். அந்த புக்ஸ்டாலில் எனக்கு ஒரு பத்திரிகை வாங்கித் தந்து

விட்டுப் போம்!’’

முன்பின் தெரியாத ஒரு மனிதர்இப்படித் தன்னை அதிகாரமாக ஏவுவதைக் கண்டு வேதாந்தத்துக்கு ஆச்சரியமே. ஆனாலும் அந்த மனிதருடைய முகத்திலிருந்த விலாசமும், தொனியிலிருந்த திடமும் அவனைக் கீழ்படியச் செயதன.

என்ன பத்திரிகை சார் உங்களுக்கு வேண்டும்?’’
எது வேணா!’ எனிதிங்’உமக்கு படிக்க என்ன வாங்குவீரோ அதை வாங்கிக்
கொண்டு வாருமேன்!’’
இதேதடா வேடிக்கை! என்று எண்ணி, ‘’இங்கிலீஷா, தமிழா? என்று மறுபடி கேட்டான்.
ஓயாமல் கேள்வி கேடகிறீரே,! நீர் இங்கிலீஷ்தான் படிப்பீரா? போய்ப் பாருங்க சார் அங்கே!’’ என்றார்.

ரயில் கிளம்ப அரைநிமிஷமே இருந்ததாகையால்,வீண் தர்க்கம் செய்ய வேண்டாமென்று ஒரு தமிழ்ப் பத்திரிகையை வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். ‘’சரிதானே, சார்?’’

‘’ரொம்ப சரி! நீர் ரொம்ப புத்திசாலி! உமக்கு ரொம்ப தாங்ஸ்! போயட்டு வாரும்!’’ என்றார் அவர்.

வேதாந்தம் தயங்கினான். ‘’போய்ட்டு வாரும் என்று சொன்னப்புறமும் அங்கே நிற்கப்படாது!’ என்று அந்தப் புதிய மனிதர் கண்டிப்புடன் சொல்லிவிட்டு,
பத்திரிகையை வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

தன் வாழ்க்கையில் இந்த மனிதர் எத்தனை தூரம் உபயோகமாக இருக்கப்
போகிறார் எனபதை அறியாமலே வேதாந்தம் அடுத்ததாக இருந்த மூன்றாவது வகுப்புப் பெட்டியில் போய் ஏறிக் கொண்டான். சென்னைக்கு காலை 7-25க்கு
போட் மெயில் வருகிறது. மோட்டார்களும், டாக்ஸிகளும் , கோச்சுகளும், ஜட்காக்களும், ரிக்ஷாக்களும் பிரயாணிகளை வீடு கொண்டு சேர்க்கஃ காத்திருக்கும் நேரம் அது.

ஸ்டேஷனுக்கு வெளியே வரவேண்டிய பிரமேயமேயில்லாமல் பிளாட்பாரத்திலேயே சந்தானம் அய்யங்காருடைய குடும்பத்திறகாக ஒரு கார்
காத்திருந்தது. ஹைகோர்ட்டில் வேலையாக இருக்கும் அவருடைய மாப்பிள்ளை கார் அது..
எனபதை பிற்பாடு வேதாந்தம் தெரிந்து கொண்டான்.. ரயிலிலிருந்து இறங்கியதும் அவர்களைப் பின் பற்றிய வேதாந்தத்துக்கு ஒரு சிறு அதிர்ச்சி முதல் முதல் ஏறபட்டது. இவனைத்தவிர எல்லாரும் காரில் ஏறி உடகார்ந்துகொண்டுவிட்டார்கள்.கதவும் சார்த்தப் பட்டது.புறப்படவும் தொடங்கி
விட்டது.

‘’சார்!’’ என்று கூப்பிட்டான் வேதாந்தம்

‘’நீ ரிக்ஷாவில் வாயேன். காரில் இடம் இல்லை!’’ என்றார் சந்தானம்

‘வீட்டு விலாசம் சொல்லவில்லையே!’’ என்று கேட்டான் அவன்.

‘’விலாசமா! அதை முன்னாடியே கேட்டுக்கிறதற்கு என்ன?’’என்று சந்தானம்
அய்யங்கார் கூறிவிட்டு, பிள்ளையிடம் , ‘’சொல்லேன் அவனுக்கு1’’ என்று கர்ஜித்தார்.

மைதிலியின் கணவன் யார்காதிலும் விழாமல் முணுமுணுத்துக் கொண்டு, ‘’நீ இதறகு முன் மெடராஸ் வந்திருக்கிறாயா?’’ என்று கேட்டான்.

‘’இல்லை’’
நாசமாய்ப் போச்சு! ஹம்! ஏதானும் ஒரு ரிக்ஷாவில்ஏறிக்கொள். ‘எழும்பூர்-ஆராவமுது கார்டன்ஸ்’’னு சொல்லு பெரிய பாலம் ஏறி இறங்குவான்.
வந்து சேர்! ‘’ஆராவமுது கார்டன்ஸ்’’’’ஞாபகம் இருக்குமா?’’

கார் டிரைவர் நல்ல அநுபவஸ்தன். வேதாந்தம் பதில் சொல்லும்வரை நிற்காமல் , காரை ஓட்டிக் கொண்டு போய்விட்டான்.

டிக்கட்டைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் வேதாந்தம். எழும்பூர் ஸ்டேஷன் அவனுக்குத் திகைப்பாக இருந்தது. ‘’உர்ர்—உர்ர்’’ என்று ஓடும்
எலக்ட்ரிக் ரயில்கள் அவன் பிரமிப்பை அதிகரித்தன. வெளியே விரைந்து செல்லும் கார்களும் பஸ்களும் அவன் மதியைக் கலக்கின. அங்கிருப்பவர்கள்
எல்லாரும் அவன் குடுமியையே பார்ப்பதாக அவனுக்குத் தோன்றியது.


ஸ்டேஷனுக்கு எதிரே தென்பட்ட ஹோட்டலில் காபிசாப்பிட்டு பிறகு போகலாம் என்று எண்ணி ஸ்டேஷன் படிக்கட்டுகளிலிருந்து கீழே இறங்கி
நடந்தான். இறங்கும்போதே சட்டைப் பையில் கையை வைத்தான்.. வயிற்றில்
‘பகீர்’’ என்றது சற்றுமுன் வரை இருந்த மணி பர்ஸைக் காணோம்! இருபது வினாடிகள்முன் அது இருந்தது இப்போது இல்லை. இருநூறு ரூபாய்க்கு மேல் இருந்த பர்ஸ்!.

(அமரர் தேவன்—மி!ஸ்டர் வேதாந்தம்)

2 comments:

  1. மோட்டார்களும், டாக்ஸிகளும் , கோச்சுகளும், ஜட்காக்களும், ரிக்ஷாக்களும் பிரயாணிகளை வீடு கொண்டு சேர்க்கஃ காத்திருக்கும் நேரம் அது.

    அந்தக்கால மெட்ராஸ் கண்களுக்கு முன் விரிகிரது. வேதாந்தம் பர்சை பறி கொடுத்து விட்டானோ? ஐயோ பாவமே.

    ReplyDelete
  2. அதேதான். அந்தக்கால மெடராஸ் கண் முன்னே
    விரிகின்றது.நான் முதலில் சென்னையை காலேஜ்
    எஜூகேஷன் டூரில்19 வயதிலதான் பார்த்தேன்.
    இதேபோல் மின்சார ரயிலின் தடதடப்பை முதலில்
    கேட்டபோதும், த்ரில்லிங்காக இருந்தது.ஆனால்
    பிழைப்புக்காக முதல் முதலாக உடன் அழைத்துவரும் இளம்பையனான ட்யூஷன் வாத்தி
    யாரை விட்டுவிட்டு வர என்ன நெஞ்சழுத்தம் பாருங்கள்.பணக்காரத் திமிர்தான்.
    நன்றி அம்மா

    ReplyDelete